"தெற்கில் பெரும் மாற்றத்தை உணர முடிகிறது'

தஞ்சாவூர், ஜன. 8:   வட இந்தியாவை விட தென்னகத்தில் நாத்திக கருத்துக்களின் தாக்கத்தை அதிகம் உணர முடிகிறது என்றார் ஜம்மு காஷ்மீர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சூடான்.   பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ச
Updated on
1 min read

தஞ்சாவூர், ஜன. 8:   வட இந்தியாவை விட தென்னகத்தில் நாத்திக கருத்துக்களின் தாக்கத்தை அதிகம் உணர முடிகிறது என்றார் ஜம்மு காஷ்மீர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சூடான்.

  பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நாத்திகம் என்னும் மாற்றுப் பண்பாடு சர்வதேச கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:

   நான் ஒரு நாத்திகன் என்னும் மனத் தெளிவிலிருந்தே எனக்கான சிந்தனை பிறக்கிறது. எனக்கு ஆன்மா இல்லை. நான் ஒரு பொருள். பொருள் இல்லாமல் ஆன்மா இல்லை. சிலர் இறைவனை நம்புதல், நம்பாதது குறித்து பேசி வருகின்றனர். இல்லாத ஒன்றைப் பற்றிய விவாதம் தேவையில்லை.   

   நான் சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. அதற்கு அடிப்படை நெறிகள் தேவை. அவற்றில் நீதி, நேர்மையும் அடங்கும். நான் என்னுடைய நடவடிக்கையில் ஏதாவது தவறு செய்தால் அது ஊழ்வினை எனக் கூறக்கூடாது. என் நடவடிக்கைகளை நான் மதிக்க வேண்டும். இதுதான் ஊழ்வினை, அறம் என்று கூறமுடியாது.      நான் இந்தியா முழுவதும் சென்றுள்ளேன். வடக்கு தெற்கு இடையே வேறுபாடு இருப்பதை உணர்ந்தேன். வட இந்தியாவில் சமயம் குறித்து நாங்கள் ஒரே நிலையில் இருப்பதையே விரும்புகிறோம். தென்னகத்தில் அதற்கு எதிரான பலமான மற்றொரு கருத்தை காணமுடிகிறது.

   25 ஆண்டுகளுக்கு முன்னர் காஷ்மீர் மிகவும் அமைதியாக இருந்தது. சமயம் அதன் போக்கை மாற்றிவிட்டது. இந்தியாவில் நாம் மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்கிறோம். காஷ்மீர் வரலாற்றைப் பார்த்தால் 1948க்குப் பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் சமயத்துடன் தொடர்பானது. அங்கு தொடர்ந்து போரை மட்டுமே காணமுடிகிறது.

அரசியல் வாதிகளும், சமயத் தலைவர்களும் ஒருபக்கமாகப் போகத் தொடங்கினர். 1989-முதல் சமயக் காழ்ப்புணர்வு அதிகமானது. அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் சமயமே.

   நாத்திகம் ஒரு மாறுபட்ட பண்பாடு என்பதற்குப் பதில் முக்கிய பண்பாடாக மாற வேண்டும். ஜம்மு காஷ்மீரிலிருந்து இங்கு வந்து பயிலும் மாணவர்கள் பட்டத்தை மட்டும் சுமந்து செல்லாமல் நாத்திகம், பகுத்தறிவு கருத்துக்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.    சிறுபான்மை, பெரும்பான்மை என்பதை விட்டொழிக்க வேண்டும். சிறுபான்மை என்பது அவர்களின் மேம்பாட்டுக்கான ஒரு கருதுகோள் மட்டுமே. பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை. நாம் அனைவரும் சமம் என்பதை அறிய வேண்டும்.

  தற்போது மக்களிடையே கருத்துக்களை கொண்டு செல்வதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. நாத்திகம் என்ற சொல்லின் அர்த்தம் ஊடகங்களுக்கு தெளிவாகத் தெரிய வேண்டும். எல்லா இடங்களிலும் நாத்திகன், நாத்திகம் என்ற சொல்லை பயன்படுத்த முயற்சிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை இதிலிருந்தே தொடங்கலாம் என்றார் சூடான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com