திருச்சி, ஜன. 8: மருத்துவத் துறையின் வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சராசரி வயது 100 ஆக உயரவும் வாய்ப்புள்ளது என்றார் தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குநர் கனகசபை.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:
"மக்கள் தொகையில் நம் நாடு உலகளவில் சீனாவுக்கு அடுத்து இருந்தாலும், 2050-ல் சீனாவை இந்தியா விஞ்சும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளை விட, நம் நாட்டில் மனித ஆற்றல் அதிகரித்துள்ளது. மேலும், இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளதால், இந்தியா விரைவில் வளர்ந்த நாடாக மாற வாய்ப்புள்ளது.
2020-ல் இந்தியா வல்லரசாகும் என்றார் அப்துல் கலாம். அவர் கூறியபடி இந்தியா மாறுவது மாணவர்களின் கையில்தான் உள்ளது.
மருத்துவச் சிகிச்சை முறை வளர்ச்சி அடைந்துள்ளதால், தற்போது மனிதர்களின் சராசரி வயது 65 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாணவர்களாக உள்ளவர்கள் முதுமையை எட்டும்போது, மருத்துவ சிகிச்சை முறையில் இன்னும் அதிகளவில் முன்னேற்றம் ஏற்பட்டு, சராசரி வயது 100 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தியானம், யோகா பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் நிச்சயமாக அந்த வயது வரை வாழலாம்.
மொழி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைக் கற்றால் வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும்' என்றார் கனகசபை.
பின்னர், 1,332 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது. மேலும், தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. கல்லூரி அதிபர் எஸ். ஜான் பிரிட்டோ, செயலர் ஏ. ஆல்பர்ட் முத்துமாலை, தேர்வு நெறியாளர் ஜி. வெலிங்டன், கல்லூரி முதல்வர் ஏ. செபஸ்தியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.