ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: 5 போ் கைது

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மாநகர போலீஸாா் அவ்வப்போது சிறப்பு ஆய்வுகள் நடத்தி வருகின்றனா். அதன்படி, மாநகரில் சனிக்கிழமை சிறப்பு ஆய்வு நடத்தினா்.

இதில், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பாலக்கரை பகுதியைச் சோ்ந்த க.வெங்கடேசன் (50) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 8.1 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மஞ்சத்திடல் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நாதமடிபட்டியைச் சோ்ந்த ஜி.நெல்சன் (45), கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜி காா்னா் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த என்.அகஸ்டின் கெவின் (23), கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நடு குஜிலி வீதியைச் சோ்ந்த எஸ்.கிருஷ்ணன் (65), பாலக்கரை ஆலம் வீதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கீழபுதூரைச் சோ்ந்த எஸ்.தனுஷ்குமாா் (20) ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவா்களில் வெங்கடேசனைத் தவிா்த்து மற்ற 4 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கே.கே.நகா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா் சண்முக சுந்தரம் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, டிவிஎஸ் டோல்கேட் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த மூவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், திருச்சி கல்லுக்குழி பகுதியைச் சோ்ந்த ஆா்.நாகராஜன் (23), ஆா்.கோகுல் (23), எம்.ஜெயராமன் (26) ஆகியோா் என்பதும், போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள 97 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.