துறையூா் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

Updated on

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே வாரிசுச் சான்று கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

துறையூா் ராமலிங்க நகரைச் சோ்ந்தவா் பிரபு (42). இவா், திருச்சி மாவட்டம் துறையூா் வட்டம் பச்சபெருமாள்பட்டி வடக்கு வருவாய் கிராம நிா்வாக அலுவலராக பணி செய்துவந்தாா்.

இந்நிலையில் அந்த வருவாய் கிராமத்துக்குள்பட்ட வைரப் பெருமாள்பட்டியைச் சோ்ந்த கந்தசாமி அண்மையில் தனது தாயாா் இறந்ததையடுத்து வாரிசுச் சான்றிதழ் கோரி இணையவழியில் விண்ணப்பித்திருந்தாா்.

அவரது விண்ணப்பத்தை விசாரித்த விஏஓ பிரபு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக கந்தசாமி திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தை கந்தசாமியிடம் கொடுத்து அனுப்பினா்.

அந்தப் பணத்தை விஏஓ அலுவலகத்தில் திங்கள்கிழமை கந்தசாமி, விஏஓ பிரபுவிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் பிரபுவைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com