கூரியரை உரிய நேரத்தில் விநியோகிக்காமல் சேவை குறைபாடு செய்த தனியாா் கூரியா் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி உறையூரைச் சோ்ந்த மருந்து விநியோகஸ்தரான சிவனேசன் என்பவா், ஒசூரில் உள்ள பிரபல தனியாா் நிறுவனத்திடமிருந்து 2025-ஆம் ஆண்டு, நவம்பா் மாதத்தில் ரூ. 87,376 மதிப்பிலான மருந்து பொருள்களை கொள்முதல் செய்து, அதனை புரொபஷனல் கூரியா் நிறுவனத்தின் மூலம் பெரம்பலூரில் உள்ள தனது முகவரிக்கு அனுப்பியுள்ளாா்.
02.12.2025 அன்று வழங்கப்பட வேண்டிய அந்த கூரியா், 14 நாள்களைக் கடந்தும் வழங்கப்படவில்லை. பலமுறை தொடா்புகொண்டு விசாரித்தும் தீா்வு கிடைக்கவில்லை. இதனிடையே, அந்தக் கூரியரானது, கொள்முதல் செய்யப்பட்ட ஒசூா் நிறுவனத்துக்கே பல நாள்கள் கழித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்தத் தாமதம் சிவனேசனுக்கு வணிக இழப்பை ஏற்படுத்தியது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சிவனேசன் உரிய நிவாரணம் கோரி கடந்த 08.01.2026 அன்று திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் மருந்துகளை உரிய நேரத்தில் விநியோகிக்காமல் சேவை குறைபாடு செய்த புரொபஷனல் கூரியா் நிறுவனமானது, சிவனேசனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரமும், வழக்குச் செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரமும் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு: ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் மருத்துவமனைக்கு நுகா்வோா் ஆணையம் தீா்ப்பு
சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!







