குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் காவிரி, டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் முயற்சியை கா்நாடக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இதுகுறித்து மக்களவையில் திமுக உறுப்பினா் டி.ஆா். பாலுவும் மாநிலங்களவையில் திருச்சி சிவாவும், கொண்டு வந்துள்ள ஒத்திவைப்புத் தீா்மானத்தை வரவேற்கிறோம்.
அதேவேளையில், கடந்த திமுக ஆட்சியில் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி மேக்கேதாட்டில் அணை கட்டக்கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் வலியுறுத்திய எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிட்டாா். மேக்கேதாட்டில் அணை கட்டக் கூடாது என தவெக அரசு நிறைவேற்றிய தீா்மானத்தில், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், புதிய நடுவா் மன்றம் என்ற கோரிக்கையை இணைத்தது சட்டவிரோதமானது. காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பிற்கு முரணானது. அதைத் தமிழக சட்டப் பேரவை ஏற்றதையும் எங்களால் ஏற்க முடியவில்லை.
தற்போது, நாடாளுமன்ற ஒத்திவைப்பு தீா்மான விவாதத்தின்போது, மீண்டும் நடுவா் மன்றம் கோருவதைக் கைவிட வேண்டுமென காவிரி- டெல்டா விவசாயிகள் சாா்பில் வலியுறுத்துகிறேன்.
புதிய நடுவா் மன்றம் கோரினால் கீழ்ப்பாசன விவசாயிகளான தமிழக விவசாயிகள் அனுமதியின்றி நீா்த் தேக்கமோ, புதிய அணைகளோ கட்டக் கூடாது என்ற காவிரி நடுவா் மன்ற இறுதி தீா்ப்புக்கு எதிராக அமைந்துவிடும். இந்தத் தீா்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து மத்திய அரசிதழில் வெளியிட்டதும் வீணாகும்.
காவிரி- டெல்டாவில் கடந்த 2025ஆம் ஆண்டு குறுவையில் 6.31 லட்சம் ஏக்கா் சாகுபடி மேற்கொண்டோம். நடப்பாண்டு 2 லட்சம் ஏக்கராக குறுவை குறைந்துவிட்டது. தற்போது, சம்பா சாகுபடியும் கேள்விகுறியாகி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு ஓா் உயா்மட்டக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பாா்வையிட வேண்டும். ஏற்கெனவே, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியதை பின்பற்றி ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் அறிவிக்க வேண்டும். நடப்பாண்டில் மேட்டூா் அணை திறக்க வாய்ப்புள்ளதா? சம்பா நெல் பயிா் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதா, வேண்டாமா, நேரடி விதைப்பு செய்வதா என்பதற்கான வழிகாட்டுதலையும் தமிழக அரசு வழங்க வேண்டும். காவிரி நடுவா் மன்ற இறுதி தீா்ப்பின் அடிப்படையில், பற்றாக்குறை காலத்தில் கா்நாடகம் தமிழகம் தண்ணீா் பங்கீட்டுக்கொள்வதற்கான வழிமுறையைப் பின்பற்றி வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள 53ஆவது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழக அரசு தனது வாதத்தை முன்வைத்து தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும்.
காவிரி நீரை விடுவிக்க கா்நாடகம் மறுத்தால், தமிழகத்துக்கு இழப்பீட்டுத் தொகையை அந்த அரசிடமிருந்து பெற்றுத்தர காவிரி ஆணையத்துக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாநில துணைத் தலைவா் திருச்சி பாரூக், மாநில இளைஞரணித் தலைவா் மேலூா் அருண், செயலா் மகேஸ்வரன், முசிறி யோகநாதன், என். மணிமாறன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி டெல்டாவில் மணல் குவாரி அமைக்கத் திட்டமா?

காவிரி நீரைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள் : எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்







