அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் மூலம் 5 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தையை பராமரிக்க திருச்சிராப்பள்ளி சாக்க்ஷீடு தொண்டு நிறுவனத்திடம் வியாழக்கிழமை ஒப்படைத்த ஆட்சியர் மேலும் கூறியது:
தமிழகத்தில் பெண் சிசுக்கொலை நீலகிரி மாவட்டத்திலும், 1985-ம் ஆண்டில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தேனி ஆகிய பகுதியிலும், 1990-ம் ஆண்டில் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தது. பெண்களுக்கான சமூக, பொருளாதார திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளித்த போதும் சிசு மற்றும் கருக்கொலைகள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்தச் சம்பவங்களை தடுக்கும் வகையில் 1991-ல் சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தொட்டில் குழந்தை திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு ஏப்ரல் வரை 789 குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் கடந்த 29-ம் தேதி அன்று செந்துறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதுவரை, அரியலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் 5 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது சேர்க்கப்பட்ட குழந்தையை பராமரிக்க திருச்சி சாக்க்ஷீடு தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்படுள்ளது.
எனவே, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத நிலைமை ஏற்பட்டால் ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் முதன்மை ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள தொட்டில்களில் சேர்க்கலாம். இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்புக்குரிய செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது, அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல், மாவட்ட சமூகநல அலுவலர் பூங்குழலி, திருச்சிராப்பள்ளி சாக்க்ஷீடு தொண்டு நிறுவன கள அலுவலர் ஸ்டெல்லாமேரி, வழக்குரைஞர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.