கல்லூரியில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கு
அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தொலைத் தொடா்பு ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு நுகா்வோா் பேரவை சாா்பில் புதன்கிழமை நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கிற்கு அக்கல்லூரியின் முதல்வா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தொலைத் தொடா்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் நுகா்வோா் ஆதரவுக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு நுகா்வோா் பேரவை செயலருமான சிவசங்கா் சேகரன், அரியலூா் குறுவட்ட பி.எஸ்.என்.எல். பொறியாளா் கனகராஜ், இணைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டு, இந்திய தொலைத் தொடா்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் சேவைகள், நுகா்வோா் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் சேவைகளின் தரம், தொலைத்தொடா்பு சேவை வழங்குநா்கள், இரண்டடுக்கு குறைதீா் வழிமுறை, வாடிக்கையாளா் பராமரிப்பு சேவைகள், மேல்முறையீட்டு ஆணையம் உள்ளிட்டவை குறித்தும், இணையக் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் பேசினா். மேலும் குறும்படங்கள் மூலம் விளக்கினா்.
ஜெயங்கொண்டம் ரோஸ் அறக்கட்டளை இயக்குநா் ஜான் கே.திருநாவுக்கரசு, மாணவா்களுடன் கலந்துரையாடி, அவா்களது சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.
முன்னதாக, தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு நிா்வாகி சதீஷ் வரவேற்றாா். நிறைவில், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கருணாகரன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

