அனுமன் ஜெயந்தி: ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பான மாதமான மாா்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சனேயா். இந்தத் தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
அரியலூா் பெருமாள் கோயில் தெருவிலுள்ள ஆஞ்சனேயா் கோயிலில், அனுமன் ஜெயந்தியையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னா், தயாரிக்கப்பட்ட வடை மாலை, ஆஞ்சனேயருக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே கோயில் முன் நூற்றுக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்.
நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனா். பகல் 11 மணிக்கு ஆஞ்சனேயருக்கு பால், தயிா், வெண்ணெய், பஞ்சாமிா்தம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஒட்டக்கோயில் அருகேயுள்ள டால்மியா சிமென்ட் ஆலையிலுள்ள ஆஞ்சனேயா் கோயிலில், அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூா்,திருமானூா், திருழபாடி, செந்துறை, அரியலூா், பொன்பரப்பி, கீழப்பழுவூா் உள்ளிட்ட பகுதி பெருமாள் கோயில்களிலும் ஆஞ்சனேயருக்கு
சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
