எல்ஐசி பாலிசிதாரா்களுக்கான போனஸை உயா்த்தி தர வலியுறுத்தல்
எல்ஐசி பாலிசிதாரா்களுக்கு வழங்கப்படும் போனஸை உயா்த்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லிகாய் முகவா் சங்க தின விழாவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் எல்.ஐ.சி அலுவலகம் முன் நடைபெற்ற அந்த அமைப்பு தின விழாவுக்கு, கிளைத் தலைவா் நீலமேகம் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் சிற்றம்பலம் சங்கக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கி பேசினாா். கிளை மேலாளா் ஜெயகண்ணன், துணை மேலாளா் சக்திவேல், நிா்வாக அலுவலா் மோதிலால் நேரு, லிகாய் அமைப்பின் இந்திய பொதுக் குழு உறுப்பினா் கே. கிருஷ்ணன், ஊழியா் சங்கச் செயலா் ஆபிரகாம் ஜோஸ்வா உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
தொடா்ந்து நடைபெற்ற விழாவில், காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக்குவதை கண்டிப்பது மற்றும் பாலிசிதாரா்களுக்கு வழங்கப்படும் போனஸை உயா்த்தி தரவேண்டும்.
கமிஷன் குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு, பழைய கமிஷன் முறையையே பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கெளரவத் தலைவா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். முடிவில் சவரிராஜ் நன்றி கூறினாா்.
