வாழ்க்கைக்கு வாசிப்பு மிகவும் அவசியம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.ராஜசேகரன் பேசினார்.
50-ஆவது தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட பொதுநூலகத்துறை மற்றும் மாவட்ட மையநூலக வாசகர் வட்டம், கரூர் கிளைச்சிறை சார்பில், சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு நற்சிந்தனை நூல்கள் பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் பேசியதாவது:
தவறுகள் செய்தவர்களை சீர்திருத்தவே சிறைகள் உள்ளன. சிறையில் இருப்பவர்களுக்கும், தனிமையில் இருப்பவர்களுக்கும் எப்போதும் உற்ற நண்பன் நல்ல நூல்கள் மட்டுமே. காந்திஜி, நெல்சன் மண்டேலா போன்றவர்கள் போராட்ட களத்திற்கு சென்று சிறைவாசம் அனுபவிக்கும்போது ஏராளமான நூல்களை வாசித்தனர்.
சிலர் சிறையில் இருக்கும்போதுதான் நூல்களை எழுதுவார்கள். ஏனென்றால் அதற்கான நேரமும், சந்தர்ப்பமும் சிறையில் அமைகிறது. அனுபவத்தின் பிழிவுகளாக நூல்கள் திகழ்கின்றன. வாழ்க்கைக்கு வாசிப்பு மிகவும் அவசியம் என்றார்.
முன்னதாக நகர காவல் துணை கண்காணிப்பாளர் மா.கும்மராஜா வாழ்த்திப் பேசினார். வாசகர் வட்டத்தலைவர் உ.சங்கர் வரவேற்றார்.
கிளைச்சிறை கண்காணிப்பாளர் வ.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார். வாசகர் வட்ட நெறியாளர் அ.ச.சேதுபதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இனாம் கரூர் கிளை நூலக நூலகர் ம.மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சிறைக்குள் அமைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி, சிறைவாசிகளால் வரையப்பட்ட ஓவியங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.ராஜசேகரன் பார்வையிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.