கரூரில் மாவட்டத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளம்போல சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஓரளவு மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவும் மழை பெய்தது. புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): கரூர்-3.4, அரவக்குறிச்சி-10, அணைப்பாளையம்-5, க.பரமத்தி-5.2, குளித்தலை-7, தோகைமலை-20, கிருஷ்ணராயபுரம்-7.8, மாயனூர்-10, பஞ்சப்பட்டி-19.2, கடவூர்-24.6, பாலவிடுதி-18.4, மைலம்பட்டி-12.4 என மொத்தம் 143 மி.மீ. மழை பெய்துள்ளது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கச் செயலர் ராமலிங்கம் கூறுகையில், மாவட்டத்தில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அமராவதி அணை உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன.
இதனால் விவசாயம் நிகழாண்டு ஓரளவு நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். கடந்தாண்டை விட இந்தாண்டு விவசாயிகள் மகிழ்ச்சியாகத்தான் உள்ளனர்.
மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்துள்ளது.
மானாவாரி விவசாயிகள் நிலக்கடலை, சோளம் போன்றவற்றை விதைக்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து பலத்த மழை பெய்தால் மட்டுமே அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும். இதற்கு வருண பகவான்தான் கருணை காட்ட வேண்டும் என்றார் அவர்.