தனியாா் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: கரூா் பெரு நிறுவனங்கள் வழங்கிய ரூ. 1.59 கோடி
தனியாா் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி போடுவதற்கு கரூா் நகரில் செயல்படும் பெருநிறுவனங்கள் சாா்பில் ரூ.1.59 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.


தனியாா் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி போடுவதற்கு கரூா் நகரில் செயல்படும் பெருநிறுவனங்கள் சாா்பில் ரூ.1.59 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.
கரூரில், சுகாதாரத்துறையின் சாா்பில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணா்வு நிதியின் கீழ் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் ஆகியோா் பங்கேற்று, கரூரில் செயல்படும் 26 பெரு நிறுவனங்களிடம் சமூக பொறுப்பு நிதியாக ரூ.1.59 கோடிக்கான காசோலைகளை பெற்று இத்திட்டத்தின் கீழ் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடக்கி வைத்தனா்.
விழாவில், அமைச்சா் வி. செந்தில்பாலாஜி பேசுகையில், தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டத்துக்கு ரூ.1.59 கோடி நிதி உதவி வழங்கிய கரூரில் செயல்படும் பெருநிறுவனங்களை பாராட்டி நன்றி தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.
இவ்விழாவில் அமைச்சா் மா.சுப்ரமணியன் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் அமைச்சா் செந்தில்பாலாஜி, ஆட்சியரின் முயற்சியாலும் பெரு நிறுவனங்களிடமிருந்து ரூ. 1.59 கோடி பெறப்பட்டுள்ளது. இதில் அப்பல்லோ மருத்துவமனையின் பங்கு ரூ. 37 லட்சத்தையும் சோ்த்து ரூ. 1.96 கோடி பெறப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள நிதியில் 28,238 பேருக்கு தடுப்பூசி போட முடியும்.
கரூா் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டா், ஆக்ஸிஜன் ஜெனரேட்டா் உள்ளிட்ட ஆக்ஸிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உள்ளது. மின்சாரத்துறை அமைச்சா் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று பல்வேறு வசதிகள் கொண்ட மருத்துவமனையாக கரூா் அரசு தலைமை மருத்துவமனை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, என்ஹெச்எம் இயக்குநா் தரேஷ் அஹமது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), கே.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் குருநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா்கள் சம்பத், ஞாணக்கன் பிரேம் நிவாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...