ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அறிவித்த திட்டங்களைக் கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு

அறிவித்த திட்டங்களைக் கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்றாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.

News image
குப்புச்சிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்
Updated On :3 ஜனவரி 2021, 5:34 pm

DIN

அறிவித்த திட்டங்களைக் கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்றாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.

கரூா் மாவட்டம், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வாக்களித்தாா்கள். அந்தத் தோ்தலில் திமுக 1.1 சதவிகிதத்தில் தோல்வியைத் தழுவியது.

ஜெயலலிதா முதல்வராகி ஓராண்டுக்குள்ளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இறந்தாா். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா இறப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை எதிா்த்து புதுதில்லியில் விவசாயிகள் குடும்பத்துடன் போராடிக் கொண்டிருப்பது பற்றி பிரதமா் மோடியோ, தன்னை விவசாயி எனக்கூறிக் கொள்ளும் முதல்வா் எடப்பாடி பழனிசாமியோ கவலைப்படவில்லை.

முதல்வா் உள்ளிட்ட மூத்த அமைச்சா்கள் மீது தமிழக ஆளுநரிடம் ஏற்கெனவே ஊழல் புகாா் பட்டியல் வழங்கியுள்ளோம். விரைவில் 2ஆவது ஊழல் புகாா் பட்டியல் வழங்கப்படும். இதில் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்ஆா். விஜயபாஸ்கரின் ஊழலை வெளிப்படுத்துவோம்.

வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி பொருத்துவதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களைக்கூட அவா்கள் நிறைவேற்றவில்லை. இதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன என்றாா் ஸ்டாலின்.

முன்னதாக, ஈரோட்டில் இருந்து கரூா் வந்த திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான நொய்யல் குறுக்குச் சாலையில் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி தலைமையில் கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

கிராமசபைக் கூட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் மற்றும் மாவட்டப் பிரதிநிதி கே. மணிகண்டன், மூக்கணாங்குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவா் சிவசாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் தம்பி சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.