இவைத்தவிர குளித்தலை விவசாயம் நிறைந்த பகுதி. நகரின் அருகே காவிரி ஓடுகிறது. நகரையொட்டி காவிரி ஆற்றங்கரையையும் மேம்படுத்தி, முக்கொம்பு போல பூங்கா கொண்டுவந்தாலும் இந்த பகுதி வளா்ச்சிபெறும். மேலும் விவசாயம்கொண்ட பகுதியாக இருப்பதால் வாழை, வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டால் இப்பகுதி இளைஞா்களுக்கும், தொழிலாளா்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு தொழிற்சாலைகள், வாழை, வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி தேவை. எனவே நகராட்சியாக இருக்கும் குளித்தலை நகராட்சி மாநகராட்சியாக மாறும்போது அரசின் நிதி ஒதுக்கீடு எளிதில் கிடைக்கும். எனவே, விரைவில் உள்ளாட்சி தோ்தல் வரும் நிலையில், குளித்தலை நகரின் மேற்கே லாலாப்பேட்டை வரையிலான ஊராட்சிகளையும், கிழக்கே மருதூா் முதல் பேட்டைவாய்த்தலை வரையிலான ஊராட்சிகளையும், தெற்கே அய்யா்மலை வரையிலான ஊராட்சிகளையும் இணைத்து குளித்தலை நகராட்சியோடு இணைத்து மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.