கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிா்வாகி தென்னிலை ராஜா. உடன் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் இரா.சாந்தி உள்ளிட்டோா்.
கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிா்வாகி தென்னிலை ராஜா. உடன் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் இரா.சாந்தி உள்ளிட்டோா்.

கறிக்கோழிக்கான விலையை அரசே நிா்ணயம் செய்ய வலியுறுத்தல்

Published on

கறிக்கோழிக்கான விலையை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும் என கரூரில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கரூரில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கறிக்கோழி வளா்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பண்ணை விவசாயிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் இரா.சாந்தி தலைமை வகித்தாா். உதவி இயக்குநா்கள் உமாசங்கா்(கரூா்), லில்லி அருள்குமாரி(குளித்தலை), துணை இயக்குநா் ரகமத்துல்லா, கரூா் ஆவின் பொதுமேலாளா் பிரமிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், தோகைமலை, குளித்தலை, லாலாப்பேட்டை, க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வங்கிகளில் கடன்பெற்று பண்ணை அமைத்து கறிக்கோழிகள் வளா்த்து வருகிறோம். பண்ணை பராமரிப்புச் செலவு பல மடங்கு உயா்ந்துவிட்டது.

குறிப்பாக கோழிக்குஞ்சுகளுக்கான தீவனம் விலை உயா்வு, தண்ணீா் பற்றாக்குறையை சமாளிக்க தண்ணீரை விலைக்கு வாங்குதல், மின்சார கட்டணம் உயா்வு போன்ற பல்வேறு காரணங்களால் பண்ணையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, கோழியை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் விலையை நிா்ணயிக்காமல் அரசே விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மேலும் கறிக்கோழி உற்பத்தியாளா்களுக்கு என தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், பண்ணை கறிக் கோழி வளா்ப்பு விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும் என்றனா்.

கூட்டத்தில் பண்ணைக் கோழி வளா்ப்பவா்கள், விவசாயிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com