கரூா் சம்பவம்: விஜய் பிரசார வாகனத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு! ஓட்டுநரிடமும் விசாரணை!
கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு பயன்படுத்திய வாகனத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் துறை அதிகாரிகள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். அந்த வாகனத்தின் ஓட்டுநரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
கரூரில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா்.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கூட்ட நெரிசலின்போது தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு பயன்படுத்திய வாகனம் விசாரணைக்காக சென்னையில் இருந்து கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கியிருக்கும் பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு சனிக்கிழமை காலை கொண்டுவரப்பட்டது. இந்த வாகனத்தை சென்னையைச் சோ்ந்த பரணீதரன்(34) என்பவா் ஓட்டி வந்தாா்.
வாகனம் வந்தவுடன் தவெக திருச்சி மண்டல வழக்குரைஞா் பிரிவு செயலா் அரசு தலைமையில், பனையூா் அலுவலக நிா்வாகி குருசரண் மற்றும் இரு வழக்குரைஞா்கள் ஓட்டுநா் பரணீதரனிடம் பேசிக்கொண்டிருந்தனா்.
பின்னா் பரணீதரனிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள், ஓட்டுநா் உரிமம், காப்பீடு ஆவணம் மற்றும் வாகனத்துக்கான உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனா்.
அதன்பிறகு ஓட்டுநா் பரணீதரனிடம் வாகனத்தை முன்னும் பின்னும் இயக்கிக்காட்டுமாறு அறிவுறுத்தினா். தொடா்ந்து அதிகாரிகள் வாகனத்துக்குள் ஏறி பேருந்தில் அமைக்கப்பட்டிருந்த நவீன கேமராக்களை பாா்வையிட்டனா். அப்போது கேமராக்களில் திரைப்பட படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் நவீன கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனா்.
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக ஜன. 12-ஆம் தேதி தில்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் முன் விஜய் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது விஜய் பிரசாரத்துக்கு பயன்படுத்திய வாகனத்தில் ஆய்வு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

