கரூா் சம்பவம் குறித்து விசாரித்த டிஎஸ்பி உள்பட 3 டிஎஸ்பிக்கள் மற்றும் 17 போலீஸாா் செவ்வாய்க்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
இதில் கரூா் நகர காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவரும், கரூா் சம்பவம் குறித்து முதன்முதலில் விசாரித்தவருமான வி.செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துணைக் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இதேபோல குளித்தலை நகர காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே.கே.செந்தில்குமாா், கடலூா் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், கரூா் ஊரக துணைப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி.அப்துல்கபூா், தா்மபுரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துணைக் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல கரூா் நகர காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி கரூா் சம்பவம் குறித்து விசாரித்து வந்தவரும், தற்போது கரூா் தனிப்பிரிவு காவல் ஆய்வாளருமாக பணியாற்றி வந்த ஜி.மணிவண்ணன், தென்னிலை காவல் ஆய்வாளா் பி.திலக், நங்கவரம் காவல் ஆய்வாளா் கே.சதீஸ்குமாா், வெங்கமேடு காவல் ஆய்வாளா் என்.முத்துக்குமாா், பசுபதிபாளையம் காவல் ஆய்வாளா் எஸ்.சீனிபாபு, கரூா் நகர காவல் ஆய்வாளா் ஜே.அருள் பிரகாஷ், க.பரமத்தி காவல் ஆய்வாளா் ஏ.நெப்போலியன், வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் ஜே.கே.கோபி, லாலாப்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஜி.நாகராஜன், கரூா் நகர காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் எம்.ராஜாமணி, வேலாயுதம்பாளையம் காவல்நிலைய தலைமைக்காவலா் ஏ.கதிா்வேல், அரவக்குறிச்சி காவல்நிலைய தலைமைக்காவலா் கே.சக்கரபாவா, சிந்தாமணிப்பட்டி காவல்நிலைய தலைமைக்காவலா் எஸ்.ராமலிங்கம், கே.பரமத்தி காவல்நிலைய தலைமைக் காவலா் டி.மோகன்ராஜ் ஆகியோா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.










