பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். ஒன்றியப் பொறுப்பாளர்கள் பிச்சைரத்தினம், வள்ளி, புவனேஸ்வரி, கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆளவந்தார், மாவட்டச் செயலர் செல்லப்பாண்டியன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் பி. தயாளன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அளித்த வாய்மொழி வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்பின் படி அரசாணை எண் 125 -ஐ அமல்படுத்த வேண்டும். 5 ஆண்டு பணி முடித்த உதவியாளர்கள் அனைவரையும் சமையலராகப் பதிவு உயர்வு வழங்க வேண்டும். 13 வகையான சத்துணவு சமைக்க, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாவட்ட தலைவர் செல்லப்பிள்ளை, மாவட்ட துணைத் தலைவர் அந்தோனிசாமி, மாவட்ட இணைச் செயலர்கள் சின்னப்பிள்ளை, பொன். ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றியப் பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.