தங்களின் 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மற்றும் அரியலூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரே அரசாணை மூலம் மாவட்ட மாறுதலை வழங்க வேண்டும், பணியிடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு அடிப்படை வசதி செய்துத் தர வேண்டும், கணினி வழிச் சான்றுகள், இணையப் பணிகளுக்கு செலவினத் தொகை வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 10 ஆம் தேதி முதல் போராட்டத்தைத் தொடங்கி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மா.ரங்கராஜ், பொருளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். 54 கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதச்சங்கிலியில் பங்கேற்றனர்.
அரியலூர் : அரியலூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் பழனிவேல் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








