பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் மார்ச் 31-க்குள் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் பிளஸ் 2 வரை வாழ்க்கை தொழிற்கல்வி, ஐ.ஐ.டி, ஐ.டி.சி, பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், எம்.பில், ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை இணையம் மூலம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தில் பயன் பெற, அனைத்துக் கல்வி நிலையங்களும் மேற்காணும் இணைய தளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்துள்ளதையும், பயனீட்டாளர் குறியீடு பெறப்பட்டுள்ளதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தால், அந்த விவரத்தை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். ஏ.ஐ.எஸ்.எச்.இ எண் பெறாத கல்வி நிலையங்கள் மத்திய அரசின் முகவரியில் உள்ள ஆன்லைன் மூலம் பதிவுசெய்து பெறலாம். பள்ளிகளை பொறுத்தவரை யூ.டி.ஐ.எஸ்.இ எண்ணுக்கு முதன்மைக் கல்வி அலுவலரை அணுகலாம். இணையத்தில் கல்வி நிலையத்தை பதிவு செய்வது தொடர்பாக கல்வி நிலைய முதல்வர், தலைமை ஆசிரியர், டீன் கோரிக்கை கடிதம், தலைமை ஆசிரியர், முதல்வர், டீன் பெயர், மொபைல் எண், கல்வி நிலையத்தின் முழு முகவரி மற்றும் இதர விவரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.