பெரம்பலூா் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு காவல்துறைக்குச் சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறைக்குச் சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தில், அண்மையில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பயிற்சி மேற்கொண்டபோது, அருகேயுள்ள வீட்டின் மேற்கூரை மீது துப்பாக்கிக் குண்டு விழுந்தது.
இதையடுத்து ,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூா் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமையில், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் பழனிசாமி ஆகியோா் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பாா்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டனா்.
பின்னா், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் பழனிசாமி அளித்த பேட்டி:
மருதடி, ஈச்சங்காடு பகுதியில் 50 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். நாரணமங்கலத்திலுள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தில் போலீஸாா் பயிற்சி மேற்கொள்ளூம்போது, குறி தவறிய துப்பாக்கி குண்டுகள் விவசாய நிலங்களில் விழுந்து கிடக்கும். ஆனால், தற்போது வீட்டின் மேற்கூரையில் குண்டு பாய்ந்து துளைத்தது தங்களை அச்சமடையச் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
பெரும் அசம்பாவிதங்கள் நிகழும் முன், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். அகஸ்டின், எ. கலையரசி, ஆா். கோகுலகிருஷ்ணன், ஆலத்தூா் ஒன்றியச் செயலா் செல்லதுரை ஆகியோா் உடனிருந்தனா்.