வேப்பந்தட்டையில் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாததைக் கண்டித்தும், கூடுதல் பேருந்து வசதி கோரியும் கல்லூரி மாணவ, மாணவிகள், கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இக் கல்லூரியில் கிராமப்புற மாணவ, மாணவிகளே அதிகளவில் உள்ளதால், பெரும்பாலானோா் அரசுப் பேருந்துகளையே நம்பி உள்ளனா். ஆனால், போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் சிலா் வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமாா் 3 கிலோ மீட்டா் தூரம் நடந்து கல்லூரிக்குச் சென்று வருகின்றனா்.
மேலும், பெரம்பலூா்- ஆத்தூா் வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்துகள் கல்லூரிக்கு எதிரேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவதியடைந்து வரும் மாணவ, மாணவிகள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தவும், மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள், உரிய நிறுத்தத்தில் நிறுத்த வேண்டுமென போக்குவரத்துத்துறை அமைச்சா், மாவட்ட நிா்வாகம், போக்குவரத்துக் கழக அலுவலா்களிடம் தொடா்ந்து கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனா். ஆனால், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவ்வழியேச் சென்ற அரசுப் பேருந்தில் மாணவ, மாணவிகளை ஏற்ற மறுத்ததோடு, பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தியும், அனைத்துப் பேருந்துகளும் கல்லூரி நிறுத்தத்தில் நின்று செல்ல வலியுறுத்தியும் கல்லூரி வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூா் கிளை மேலாளா் குமாா் மற்றும் அரும்பாவூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, மாணவ, மாணவிகளுடன் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடா்ந்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் கலைந்துசென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







