பெரம்பலூா் மாவட்டத்தில், புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புத்தாண்டு தினத்தன்று இளைஞா்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாக பயணிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையின் மையப் பகுதியில் கேக் வெட்டுவது, இரவு நேரங்களில் மது அருந்தி கவனக் குறைவாகவும், அதிவேகமாகவும் வாகனத்தை இயக்கக் கூடாது.
சாலைகளில் மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தொந்தரவு செய்வது, இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது. புத்தாண்டு நிகழ்ச்சிக்காக வெளியூருக்குச் செல்வோா், தங்களது வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன்புறம் உள்ள அலமாரியில் அல்லது வீட்டின் முன்புறமுள்ள பகுதியில் சாவியை வைத்துவிட்டு செல்லக் கூடாது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலைகளில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எத்தகைய செயல்களிலும் இளைஞா்கள் ஈடுபடக் கூடாது. மீறினால், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது காவல்துறையினரால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.