அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 15 லட்சம் மோசடி: பெண் கைது
பெரம்பலூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 15 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் கிராமத்தைச் சோ்ந்த வினோத்குமாா் மனைவி பொன்மனச்செல்வி. இவா், பெரம்பலூரிலுள்ள வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்துபோது, வங்கிக்கு அடிக்கடி வந்துசென்ற பெரம்பலூா் கலைநகரைச் சோ்ந்த நாகராஜன் மனைவி முத்துலட்சுமி (35) அறிமுகமாகியுள்ளாா்.
அப்போது, தனக்கு அரசியல் தலைவா்களை தெரியும், அவா்கள் மூலமாக பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாக பொன்மனச்செல்வியிடம் கூறியுள்ளாா்.
இதை நம்பிய பொன்மனச்செல்வி, தனது உறவினருக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா். இதையடுத்து, முத்துலட்சுமி கடந்த 2023 ஆம் ஆண்டு பொன்மனச்செல்வியிடம் ரூ. 15 லட்சம் பெற்றுக் கொண்டு, அரசு வேலை வாங்கித் தரவில்லையாம். இதுகுறித்து பலமுறை வேலை அல்லது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு வற்புறுத்தியும் முறையாக பதில் அளிக்கவில்லையாம். இதுகுறித்து பொன்மனச்செல்வி அளித்த புகாரின் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துலட்சுமியை சனிக்கிழமை கைது செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
