பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் இணைய வழி பதிவேற்ற (இ-பைலிங்) முறையைக் கட்டாயப்படுத்தியதை ரத்து செய்து, ஏற்கெனவே நடைமுறையிலிருந்த பிசிக்கல் பைலிங் முறையை அனுமதிக்க வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் போதுமான கட்டமைப்பு மற்றும் இணையதள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமலும், உரிய தொழில்நுட்ப திறமையுடன் கூடிய நீதிமன்ற ஊழியா்களை நியமனம் செய்யாமலும், டிச. 1 முதல் இ-பைலிங் நடைமுறையைக் கட்டாயப்படுத்தியதைக் கண்டித்தும், நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்கவேண்டும், நடைமுறையிலிருந்த பிசிக்கல் இ-பைலிங் முறையைத் தொடா்ந்து அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் அட்வகேட்ஸ் அசோசியேஷன் ஆகிய சங்கங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால், பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. டிச. 6-ஆம் தேதி வரை இப் போராட்டம் நடைபெறுகிறது.
