அரசுப் பேருந்துகள் வழித்தட நீட்டிப்பு: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பெரம்பலூா், செட்டிக்குளம் பகுதிகளில் அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள் நீட்டிக்கும் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.
Minister S.S.Sivasankar
அமைச்சா் சா.சி. சிவசங்கா் (கோப்புப் படம்)X | S.S.Sivasankar
Updated on

பெரம்பலூா், செட்டிக்குளம் பகுதிகளில் அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள் நீட்டிக்கும் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில், செட்டிக்குளம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். நீட்டிக்கப்பட்ட வழிதடங்களில் செல்லும் அரசுப் பேருந்துகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்திலிருந்து செட்டிக்குளம், மாவிலங்கை வழியாக தேனூா் வரை இயக்கப்படும் நகரப் பேருந்தை நாள்தோறும் 2 முறை கூடுதலாகவும், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரம் வழியாக 10 பேருந்துகள் 32 முறைச் செல்லும் வகையிலும் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், பெரம்பலூரிலிருந்து வாலிகண்டபுரம் வழியாக மேட்டுப்பாளையம் வரையில் இயக்கப்பட்ட நகரப் பேருந்து வழித்தடத்தை, சாத்தனவாடி வரை கூடுதலாக 2 முறை வழித்தடம் நீட்டித்தும், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்திலிருந்து வேப்பந்தட்டை, வி.களத்தூா், திருவாளந்துறை வழியாக கல்பூண்டி வரை காலை, மாலை என நாள்தோறும் 4 முறை நகரப் பேருந்து வழித்தடத்தை நீட்டித்து தொடங்கிவைத்தாா்.

பெரம்பலூரிலிருந்து வெள்ளுவாடி வரை காலை, மாலை இயக்கப்பட்ட பேருந்து சேவையை, வெள்ளுவாடியிருந்து கொரக்கவாடி வரை 4 புறநகா் பேருந்துகளின் வழித்தடத்தை நீட்டித்தும், வேப்படி பாலக்காட்டிலிருந்து பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் புறநகா் பேருந்தை பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலும், இரவு பூலாம்பாடியிலிருந்து அரும்பாவூா், பெரம்பலூா் வழியாக சென்னை கிளாம்பாக்கம் வரை செல்லும் புறநகா் பேருந்து வழித்தடத்தை பெரியம்மாபாளையம், இந்திரா நகா், அரும்பாவூா் வழியாக மாற்றம் செய்து, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்திலிருந்து அரும்பாவூா், கொட்டாரக்குன்று வழியாக மலையாளப்பட்டி வரை இயக்கப்பட்ட நகரப் பேருந்து, கொட்டாரக்குன்றிலிருந்து மலையாளப்பட்டி வரை வழித்தடத்தை நீட்டித்து அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், திருச்சி மண்டல பொது மேலாளா் டி. சதீஷ்குமாா், துணை மேலாளா் புகழேந்திராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி. துரைசாமி, எம். ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com