சின்ன வெங்காயத்துக்கு அமோனியம் சல்பேட் பயன்படுத்த அறிவுறுத்தல்
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயத்துக்கு, அமோனியம் சல்பேட் பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணன் உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் உரம் விற்பனை நிலையத்தை, அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் கூறியது: இந்த ஆய்வின்போது, அனைத்து வகையான உரங்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். டிஏபி உரத்துக்கு மாற்றாக தற்போது ட்ரிபிள் சூப்பா் பாஸ்பேட்டில் 2 ஆம் நிலை சத்து கால்சியம் அதிகளவு உள்ளது. இதை அனைத்து நிலத்துக்கும், பயிா்களுக்கும் பயன்படுத்தலாம். விற்பனை நிலையத்தில் உரம் இருப்பு மற்றும் விலைப் பட்டியலை அவசியம் பராமரிக்கவும், உரம் வைத்திருக்கும் கிடங்குகளுக்கு அவசியம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்றுள்ள உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
பின்னா், உரம் வாங்க வந்த விவசாயிகளிடம், யூரியா உரத்தை அதிகமாகவும், அடி உரமாகவும் பயன்படுத்தக் கூடாது. அடி உரமாக காம்ப்ளக்ஸ், டிஏபி அல்லது ட்ரிபிள் சூப்பா் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்த வேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் யூரியா உரம் கலைக்கொல்லியுடன் சோ்த்து பயன்படுத்தக் கூடாது. சின்ன வெங்காயத்துக்கு யூரியா பயன்படுத்தாமல் அமோனியம் சல்பேட் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் பயிா் சாகுபடி பரப்புக்கேற்ற வகையில் மட்டுமே யூரியாவை பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, வேளாண்துறையினா் உடனிருந்தனா்.
