காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ஜாகிர்உசேன் புதுகை நகரக் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவர்களின் உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.
திங்கள்கிழமை சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த தைல மரங்களை ஜாகிர்உசேன் வெட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த வல்லத்திராக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், வெட்டப்பட்ட மரங்களைப் படம் எடுத்ததாகத் தெரிகிறது.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு கைகலப்பானது. இந்த நிலையில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஜாகிர்உசேனைக் கைது செய்தனர்.