ஒரத்தநாடு அருகே மேல மேட்டுப்பட்டியில் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை விழுந்ததில் பெண் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அம்மானிபட்டு கிராமத்தைச் சேர்ந்த சாமிகண்ணு, என்பவருடைய மனைவி விஜயராணி. இவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது சகோதரர் வீட்டிலிருந்து உடையப்பன் விடுதிக்கு செல்ல அந்த வழியாக வந்த ஒருவரிடம் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்துள்ளார்.
அப்போது போது திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டியில் ரவிச்சந்திரன் என்பவர் அவரது தந்தை முத்து வீரப்ப பிள்ளைக்கு கண்ணீர் அஞ்சலி விளம்பரப் பலகையை சாலை ஓரத்தில் வைத்துள்ளார். இது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயராணி மீது திடீரென விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி விஜயதாரணி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிசந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.