

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக பயன்படுத்தப்படவுள்ள 337 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் உரிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு கணினி வழி ஒதுக்கீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டன.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் இந்தக் கணினி வழி ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான கவிதா ராமு தலைமையில் இப்பணி நடைபெற்றது.
புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய இரு நகராட்சிகளிலும் அமைக்கப்படும் 159 வாக்குச்சாவடி மையங்களுக்காக 191 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 8 பேரூராட்சிகளிலும் அமைக்கப்படும் 121 வாக்குச்சாவடி மையங்களுக்காக 146 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.
இவை தவிர, மாவட்டத்தில் தற்போது 869 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 324 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பணியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) என். கிருஷ்ணமூா்த்தி, புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் நாகராஜன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.