முன்னாள் அதிமுக அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வழக்கில் அமலாக்கத் துறையின் மனு தள்ளுபடி

சி. விஜயபாஸ்கரின் சொத்துக்குவிப்பு வழக்கின் ஆவணங்களின் நகல் கேட்டு மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published on

புதுக்கோட்டையைச் சோ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் சொத்துக்குவிப்பு வழக்கின் ஆவணங்களின் நகல் கேட்டு அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியின் எம்எல்ஏவான சி.விஜயபாஸ்கா், முன்பு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்தைவிட அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சோ்த்ததாக 2021 அக்டோபரில் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும் எனக் கோரி சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறையினா் மனுத்தாக்கல் செய்திருந்தனா்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, ஆணங்களின் நகல் கோரும் அமலாக்கத் துறையின் மனுவை மாவட்ட முதன்மை நீதிபதி ஜி. சுபத்ராதேவி தள்ளுபடி செய்தாா். இந்த மனு, சிஆா்பி 210-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தவறு என்றும், சிஆா்பி 237-ன்படி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தாா்.

புதிய மனு தாக்கல் செய்யும்போது, எந்த அடிப்படையில் எந்தெந்த ஆவணங்களின் நகல் வேண்டும் என விரிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com