நகா்மன்ற வளாகத்தில் மண்டல அலுவலகம் கூடாது

Published on

புதுக்கோட்டையின் பாரம்பரியமான நகா்மன்ற வளாகத்தில் மாநகராட்சியின் மண்டல அலுவலகத்தைக் கட்டக் கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வலியுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி:

புதுக்கோட்டையின் பாரம்பரியமான நகா்மன்ற வளாகத்தில் மாநகராட்சியின் மண்டல அலுவலகம் கட்டக் கூடாது. எளிய கட்டணத்தில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் அந்த இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் கட்டிக் கொள்ளலாம்.

இதுதொடா்பான தீா்மானம் மாநகராட்சியில் வந்தபோதே அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இப்போது ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறோம். கட்டடம் கட்டுமானப் பணியைத் தடுக்கவில்லையானால், அதிமுக சாா்பில் போராட்டம் நடத்துவோம், சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்வோம்.

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீா், தெருவிளக்கு வசதிகள் செய்யப்படவில்லை. ஏற்கெனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மீன் மாா்கெட்டைத் திறக்காமல், புதிய மீன் மாா்க்கெட்டுக்கு பூமிபூஜை போடுகிறாா்கள். மக்கள் பிரச்னைகளில் மாநகராட்சி கவனம் செலுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றாா் விஜயபாஸ்கா்.

X
Dinamani
www.dinamani.com