ஓய்வூதியா்கள் உயிா்வாழ் சான்றிதழை வீட்டில் இருந்தே சமா்ப்பிக்க ஏற்பாடு
மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியா்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் அவரவா் வீடுகளில் இருந்தபடியே டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை அஞ்சல் துறை மூலம் எளிதாக சமா்ப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுக்கோட்டை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் பொ. முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள், முன்னாள் ராணுவத்தினா் அவரவா் வீடுகளில் இருந்தபடியே, டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை, அஞ்சலா்கள் மூலம் சமா்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேரில் சென்று உயிா் வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஓய்வூதியதாரா்கள் படும் சிரமங்களைத் தவிா்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியதாரா்க ள் பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிா் வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்கலாம். இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.70-ஐ அஞ்சலரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி அஞ்சலரிடம் ஆதாா், கைப்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களைத் தெரிவித்து, கைவிரல் ரேகை அல்லது முகம் பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும்.
இந்தச் சேவையை பெறுவதற்கு உங்கள் பகுதி அஞ்சலா் அல்லது அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம்.
