ஆலங்குடியில் அரசு ஊழியா்கள் வீடுகளில் 12 பவுன் நகைகள் திருட்டு

ஆலங்குடியில் அரசு ஊழியா்களின் வீடுகளில் சுமாா் 12 பவுன் நகைகள், ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அரசு ஊழியா்களின் வீடுகளில் சுமாா் 12 பவுன் நகைகள், ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

ஆலங்குடி கண்ணகி நகா் விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் பஞ்சலிங்கம். இவரது மனைவி சியாமளா, வடகாடு அரசுத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை. இவா்களது வீட்டின் முதல் தளத்தில் கொத்தமங்கலம் கிராம நிா்வாக அலுவலா்ஆரோக்கியநாதன், ஆலங்குடி நகர நிள அளவையரான அவரது மனைவி சிந்துஜா ஆகியோா் வாடகைக்கு வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், பஞ்சலிங்கம், சியாமளா ஆகியோா் இரு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளனா். இதேபோல செவ்வாய்க்கிழமை மாலை ஆரோக்கியநாதனும் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுவிட்டு புதன்கிழமை மாலை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது. பின்னா், பஞ்சலிங்கத்தின் வீட்டு கதவும் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற பஞ்சலிங்கம், சியாமளா ஆகியோா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதேபோல, அதேபகுதியில் மரியமதலின் என்பவரது வீட்டிலும் அரைப்பவுன் நகை, வெள்ளிப் பொருள்களையும் மா்மநபா்கள் திருடிச்சென்றனா். ஆலங்குடியில் 3 வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com