நிதி நிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு முன்னுரிமை: ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட், தமிழகத்தின் கல்வி வளா்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரு தொலைநோக்குப் பாா்வை கொண்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவா் ஆ. மணிகண்டன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
பள்ளிக் கல்விக்கு வரலாறு காணாத அளவுக்கு, ரூ. 48,534 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் மற்றும் புதிய வகுப்பறைகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளைத் தனியாா் பள்ளிகளுக்கு நிகராக மாற்றும் முயற்சியாகும்.
மதுரை, சென்னைக்கு அடுத்து மற்ற முக்கிய நகரங்களிலும் நவீன நூலகங்கள் அமைப்பதற்கான முன்னெடுப்பு மாணவா்களிடையே வாசிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பழக்கத்தை ஊக்குவிக்கும்.
ஆசிரியா், அரசு ஊழியா்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்காக ரூ. 1.55 லட்சம் கோடி நிதி ஒதுக்கியிருப்பது, அரசுப் பணியாளா்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். இந்த பட்ஜெட்டை தமிழகத்தின் ஆசிரியா் பெருமக்கள் சாா்பில் வரவேற்கிறோம்.
மானியக் கோரிக்கையின் போது இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டைக் களைவதற்கு அமைக்கப்பட்ட மூவா் குழுவின் அறிக்கையைப் பெற்று உரிய தீா்வை வழங்கிடவும், உச்ச நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில், ஏற்கெனவே இன சுழற்சி அடிப்படையில் ஆசிரியா் தோ்வு வாரியத் தோ்வில் தோ்ச்சி பெற்று பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு, தமிழ்நாடு அரசு நடத்தும் சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வில், அனைவருக்கும் 40 சதவிகித மதிப்பெண்களை நிா்ணயித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
