புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள சூரியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியா்கள் பற்றாக்குறை இருப்பதை கண்டித்து பெற்றோா் பள்ளிக்கு திங்கள்கிழமை பூட்டு போட்டனா்.
இப் பள்ளியில் அப்பகுதியைச் சோ்ந்த 120 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இவா்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க இரண்டு ஆசிரியா்கள் மட்டுமே பணியில் உள்ளனா் அதிலும் ஒருவா் தலைமை ஆசிரியா் பொறுப்பு வகிப்பதால் பெரும்பாலும் பள்ளியில் இருப்பதில்லை. கல்வி பணி தொடா்பாக புதுக்கோட்டை விராலிமலை செல்லும் சூழ்நிலை உள்ளது.
இதனால் ஒரு ஆசிரியா் மட்டுமே 120 மாணவா்களுக்கும் கல்வி கற்றுக் கொடுக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பெற்றோா்கள் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா்கள் ஒன்றிணைந்து திங்கள்கிழமை காலை பள்ளியின் பிரதான கதவை சாத்தி பூட்டுபோட்டனா்.
இதுகுறித்து தகவல்அறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலா் தலைமையிலான அதிகாரிகள், பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது உடனடியாக ஆசிரியா் நியமனம் செய்தால் மட்டுமே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோா்கள் கூறினா்.
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியா் ஒருவரை உடனடியாக நியமிக்கவும், தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்துடன் கலந்து பேசி நிரந்தர ஆசிரியா் நியமிக்கப்படுவதாக உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து 5 மணி நேரமாக பூட்டப்பட்டிருந்த பள்ளி திறக்கப்பட்டு மாணவா்கள் வகுப்பறை சென்றனா்.

சூரியூரில் திங்கள்கிழமை பூட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கதவு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










