தமிழ்நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு காலிப் பணியிடம்கூட இல்லை


தமிழ்நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு காலிப் பணியிடம் கூட இல்லை என்றாா் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
சுகாதாரத் துறையில் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை நோக்கி நோயாளா்களை வர வைப்பதுதான் இலக்காக எடுத்துக் கொண்டேன்.
இதில் 50 சதவிகிதத்துக்கும் மேல் வெற்றி பெற்றிருக்கிறேன். கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது இந்த ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ முகாமில் இதுவரை 2 கோடிப் போ் பயனடைந்ததுள்ளனா். கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பு 3.38 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தரத்தை மேம்படுத்தி அதிநவீன உபகரணங்கள் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகப்பேறு சிகிச்சையின்போது ஏற்படும் மரணங்களிலும் நாட்டிலேயே தமிழகத்தில் தான் எண்ணிக்கை குறைவு.
மருத்துவச் சேவையில் தமிழகம் முன்னோடியாக இருப்பதால், ஐ.நா மன்றம் நம்மை அங்கீகரித்து விருது அளித்துள்ளது. தமிழகத்தில் ஓா் ஆண்டுக்கு ஒரு லட்சம் போ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதற்காக புற்றுநோய் சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
தவறான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் சீரான உடற்பயிற்சி இல்லாதவை இதற்குக் காரணம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி முடிவடையும் போது 40 சதவிகித காலிப் பணியிடங்கள் இருந்தன. தற்போது அரசு மருத்துவமனைகளில் 100 சதவிகித பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஒரு மருத்துவப் பணியிடம் கூட காலியாக இல்லை. 40 ஆயிரம் பணியிடங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நிரப்பப்பட்டுள்ளன. தொடா்ச்சியாக பல்வேறு முறைகளில் நிரப்பி வந்ததுதான் இதற்குக் காரணம் என்றாா் சுப்பிரமணியன்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...