தஞ்சாவூரில் உப்பு பாக்கெட்டுகளில் விதிமீறல் தொடர்பாக 4 கடைகளுக்கு தொழிலாளர் துறையினர் புதன்கிழமை ரூ. 10,000 அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் தொழிலாளர் ஆய்வாளர் இர. கவிஅரசு தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் கீழவாசல், நாஞ்சிக்கோட்டை, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள 20-க்கும் அதிகமான மளிகை கடைகள், 20-க்கும் மேற்பட்ட தெருவோர பழக்கடைகளில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் செ. மின்னல்கொடி, த. சுபாஷ்சந்திரன், அ. முத்துபாண்டி மற்றும் உதவி ஆய்வாளர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
அப்போது, மளிகை கடை உரிமையாளர்களிடம் முழு முகவரி இல்லாத, போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட்டுகள் வாங்கி விற்பனை செய்ய வேண்டாம் எனவும், பொட்டலப் பொருள் விதிகளின் கீழ் பதிவு செய்துள்ள உப்பு விநியோகஸ்தர்களிடம் இருந்து மட்டுமே உப்பு பாக்கெட்டுகள் கொள்முதல் செய்து, விற்பனை செய்ய வேண்டும் என்றும், பதப்படுத்துதல், தொழிற்சாலை உபயோகத்துக்கு எனக் குறிப்பிட்ட உப்பு பாக்கெட்டுகள் அனைத்தும் 2 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மட்டுமே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.
பொட்டலப் பொருள் விதிகளின் கீழ் காணப்பட்ட முரண்பாடுகளுக்காக 4 கடைகள் நிறுவனங்களுக்கு ரூ. 2,500 வீதம் ரூ. 10,000 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஏராளமான தெருவோர பழக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து முத்திரையிடப்படாத, அளவு சரியில்லாத ஏராளமான தராசுகள் மற்றும் எடைகள் பொது பறிமுதல் செய்யப்பட்டன என கவிஅரசு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.