தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் 2.45 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட நூலக அலுவலர் பெ. செல்வராசு.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
மாவட்டத்தில் தலா ஒரு மாவட்ட மைய நூலகம், நடமாடும் நூலகம், 58 கிளை நூலகங்கள், 48 ஊர்ப்புற நூலகங்கள், 3 பகுதி நேர நூலகங்கள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 201 உறுப்பினர்கள் உள்ளனர். புரவலர்கள் 3,615 பேரும், பெரும் புரவலர்கள் 8 பேரும் இருக்கின்றனர்.
மாவட்ட மைய நூலகத்தில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 382 நூல்கள் உள்ளன. இதில், 34,271 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நூலகத்தில் அரசுப் பணிக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், இப்போது 120 பேர் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்குச் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மையத்தில் 500 பேர் வரையிலும் பயிற்சி அளிக்க வசதிகள் உள்ளன. எனவே, இங்கு படிக்க விரும்புவோர் சேரலாம்.
மைய நூலகத்தில் உள்ள வாசகர் வட்டம் மூலம் சுமார் 40 பேருக்கு உரிய வாய்ப்புகள் வழங்கி சிறந்த பேச்சாளர்களை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் நூலக வார விழா வெள்ளிக்கிழமை (நவ.17) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும், நல் நூலகர் விருது பெற்ற நூலகர் கெளரவிக்கப்படவுள்ளார் என்றார் செல்வராசு.
அப்போது, மைய நூலக முதல் நிலை நூலகர் ப. மணிமேகலை, வாசகர் வட்டத் தலைவர் ஆதி. நெடுஞ்செழியன், பாவலர் தர்மராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.