திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனர்.
திருவையாறு அருகே விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை அமைப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு விளாங்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல், மணல் குவாரியை அமைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுத்தனர். மேலும், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் கோட்டாட்சியர் சி. சுரேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியர் லதா, காவல் துணைக் கண்காணிப்பாளர் அன்பழகன், ஆய்வாளர் ஸ்ரீதர், பொதுப் பணித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கிராம மக்கள் பேசுகையில், விளாங்குடி பகுதிக்கு 25 ஆண்டுகளாக மணல் குவாரி வரக் கூடாது என தொடர்ந்து போராடி வருகிறோம். மணல் குவாரி அமைக்கப்பட்டால் விளாங்குடி உள்பட 10 கிராமங்களில் விவசாயம், குடிநீர், வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, மணல் குவாரியை அமைக்கக் கூடாது எனக் கூறி வெளிநடப்பு செய்தனர்.பின்னர், மணல் குவாரி அமைக்கக் கூடாது என வட்டாட்சியர் அலுவலகம் முன் முழக்கங்கள் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









