குறுவை தொகுப்புத் திட்டத்துக்கு இணையாக விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே விளாங்குடியில் உள்ள தூரியார் வடிகாலில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணியை சனிக்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
குறுவை தொகுப்பு திட்டத்திற்கு பதில் அதற்கு இணையான என்னென்ன வேண்டுமோ அவையெல்லாம் வழங்கப்படுகிறது. மும்முனை மின்சாரம், உர மானியம், நுண்ணுயிர் உரம், தழைச்சத்து உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் வழங்கி வருகிறார்.
விவசாயக் கடன் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார். ஏற்கனவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு உடனடியாக கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூட்டுறவு மூலம் இதுவரை ரூ. 344 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கப்படும்.
தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணி இதுவரை 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது மீதமுள்ள 5 சதவீதப் பணிகள் இரு நாட்களில் முடிக்கப்படும் என்றார் அமைச்சர் துரைக்கண்ணு.