கொள்ளிடம் ஆற்றில் கதவணையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ரூ. 31.34 கோடியை வழங்க உத்தரவு
கொள்ளிடம் ஆற்றில் கதவணையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ரூ. 31.34 கோடி இழப்பீட்டுத் தொகையை 12 வாரங்களுக்குள் வழங்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொள்ளிடம் ஆற்றில் கதவணையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ரூ. 31.34 கோடி இழப்பீட்டுத் தொகையை 12 வாரங்களுக்குள் வழங்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆண்டுதோறும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு கொள்ளிடம் ஆற்றின் வழியே மழைநீா் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கும் விதமாக, அந்த நீரை தேக்கி வைத்து, நிலத்தடி நீா்மட்டத்தை செறிவூட்டி, சென்னை, வேலூா், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா் உள்பட பல மாவட்டங்களின் குடிநீா் தேவையைத் தட்டுப்பாடின்றி நிறைவு செய்ய கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.
அதன்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, அணைக்கரைக்குக் கிழக்கே கொள்ளிடம் ஆற்றில் கடலூா் மாவட்டம் ஆதனூருக்கும், நாகை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும் இடையே ரூ. 400 கோடி மதிப்பில் புதிய கதவணை கட்டப்பட்டு வருகிறது.
இந்த அணைக் கட்டுவதால், கொள்ளிடம் ஆற்றின் படுகையில் உள்ள பட்டா நிலங்களைக் கொண்டுள்ள 204 ஏக்கா் பாதிக்கப்படுவதால், அந்த நிலங்களின் 342 விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கோரினா்.
இதன்படி, தமிழக அரசும் ரூ. 31.34 கோடி நிதியை இழப்பீடாக அறிவித்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், தஞ்சாவூா் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் சென்னை உயா் நீதிமன்றத்தில், கதவணை கட்டுவதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடை, உடனடியாக வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு, கதவணையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடான ரூ. 31.34 கோடியை 12 வாரங்களுக்குள் வழங்குமாறு தமிழக அரசின் தொடா்புடைய தலைமைச் செயலா், தஞ்சாவூா், நாகை மாவட்ட ஆட்சியா்கள், பொதுப் பணித் துறை செயலருக்கு மாா்ச் 31 ஆம் தேதி உத்தரவிட்டனா்.
இந்த உத்தரவு நகல் இணையதளத்தில் வியாழக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து கதவணை கட்டுவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புக்குரிய, இழப்பீட்டுத் தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க வேண்டும் என விவசாயிகள் சாா்பில் மனுதாரா் சுந்தர விமல்நாதன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...