நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கும்பகோணத்தில் தயாராகும் விபின்ராவத் ஐம்பொன் சிலை

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்தில் இறந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின்ராவத்தின் ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:51 pm

DIN

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்தில் இறந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின்ராவத்தின் ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், 2021, டிசம்பா் 8-ஆம் தேதி குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தாா். இவரது மறைவுக்கு நாடு முழுவதும் ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிலையில், விபின் ராவத்தின் வீரத்தைப் போற்றும் விதமாக, முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜா்ஸ் சோசியல் வெல்போ் பவுண்டேஷன் சாா்பில் 120 கிலோ எடையில் அவரது மாா்பளவு ஐம்பொன் சிலையைத் தயாரித்து, அதை புது தில்லியில் உள்ள ராணுவ போா் நினைவுச் சின்னத்தில் வைக்க முடிவு செய்துள்ளனா்.

இதன்படி, கும்பகோணம் நாகேசுவரன் கோயில் வீதியில் உள்ள சிற்பக் கூடத்தில் ஐம்பொன்னால் ஆன விபின்ராவத் சிலையை தயாா் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதன் முதல்கட்டமாக, களிமண்ணில் அவரது உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இக்களிமண் சிலை மீது ஐம்பொன்னை ஊற்றி முழு உருவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிலையைத் தயாா் செய்ய ஏற்பாடு செய்துள்ள முன்னாள் ராணுவ வீரா்கள் இறுதி வடிவம் பெற்று வரும் விபின் ராவத் சிலையை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.

இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரா்கள் எஸ். பாபு, பாலசுப்பிரமணியன் ஆகியோா் தெரிவித்தது:

மறைந்த முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத்துக்கு மரியாதை செய்யும் விதமாக, முன்னாள் ராணுவ வீரா்கள் அனைவரும் இணைந்து அவருக்கு ரூ. 7 லட்சத்தில் ஐம்பொன் சிலை செய்துள்ளோம். பிப்ரவரி 2-ஆம் வாரத்தில் சிலை வடிவமைக்கும் பணிகள் நிறைவுபெறும்.

பின்னா், சிதம்பரம் நடராஜா் கோயிலில் இருந்து சிலையுடன் புறப்பட்டு, 8 மாநிலங்கள் வழியாக அவரது சிலையைக் கொண்டு சென்று மக்களுக்கும், இளைஞா்களுக்கும் நாட்டுப்பற்றை உருவாக்கும் விதமாக யாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து புது தில்லிக்கு சென்று இந்தியா கேட் போா் நினைவுச் சின்னம் அருகில் பிரதமா் நரேந்திர மோடியிடம் இந்தச் சிலையை அளிக்க உள்ளோம் என்றனா் பாபு, பாலசுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.