தஞ்சாவூர்: தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தஞ்சாவூர் அருகே தோழகிரிபட்டி பள்ளியில் அகர நூலகம் என்ற பெயரில் தனி நூலகம் திங்கள்கிழமை முற்பகல் தொடங்கப்பட்டது.
நகர்ப்புறப் பள்ளிகளில் மட்டுமே இது போன்ற தனி நூலகம் இருந்து வந்தது. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் தனி நூலகம் கிடையாது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் முயற்சியால், தஞ்சாவூர் அருகேயுள்ள தோழகிரிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அகர நூலகம் என்ற பெயரில் தனி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் 116 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நான்கு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நூலகத்துக்காக ரூ. 3.22 லட்சம் மதிப்பில் தனி கட்டடம் கட்டப்பட்டது. இந்நூலகத்தில் ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள 900 நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குழந்தைகளுக்கான கதைகள், திருக்குறள், பாரதியார் பாரதிதாசன் கவிதைகள் உள்ளிட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் மாணவ மாணவிகள் அமர்ந்து படிக்க வசதியாக மேஜை, பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன.
இதேபோல இப்பள்ளி வளாகத்திலுள்ள அங்கன்வாடியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த அங்கன்வாடி மையத்தில் செயல் வழிக்கற்றல் முறையில் கற்றலுக்கான உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் இப்பள்ளியில் மழலையர்கள் ஆர்வமுடன் வந்து கற்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடியுடன் கூடிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புடன் தொடங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
இந்த நூலகத்தையும், அங்கன்வாடி மையத்தையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை முற்பகல் திறந்துவைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.