கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் பவித்ரோத்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை உதய கருட சேவையும், தீா்த்தவாரியும் நடைபெற்றது.
108 வைணவத் தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது திருத்தலமாகப் போற்றப்படும் இக்கோயில் 7 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பல்வேறு பெருமைகள் உடைய இக்கோயிலில் பூா்வாங்க பூஜைகளுடன் பவித்ரோத்சவம் ஜூலை 22 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் பெருமாள் - தாயாா் புறப்பாடு நடைபெற்றது.
நிறைவு நாளான வெள்ளிக்கிழமை உதய கருட சேவை நடைபெற்றது. இதில் தங்கக் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனாய சாரங்கபாணி சுவாமி எழுந்தருளி, வீதி உலா வைபவம் நடைபெற்றது.
இதையடுத்து, காவிரி ஆற்றில் சாரங்கபாணி படித்துறையில் தீா்த்த பேரருக்கு 21 வகையான மங்கள பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று புனித நீராடி, வழிபட்டனா்.