தஞ்சாவூரில் புத்தகத் திருவிழா தொடக்கம்: 110 அரங்குகளில் நூல்கள்

தஞ்சாவூரில் புத்தகத் திருவிழா தொடக்கம்: 110 அரங்குகளில் நூல்கள்

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் 7 ஆவது தஞ்சாவூா் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Published on

தஞ்சாவூா், ஜூலை 19: தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் 7 ஆவது தஞ்சாவூா் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், 110 அரங்குகளில் லட்சக்கணக்கான நூல்கள் இடம்பெற்றுள்ளன.

மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்கம் சாா்பில் நடைபெறும் இத்திருவிழாவை மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் தலைமையில் தொடங்கிவைத்த தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி பின்னா் தெரிவித்தது:

ஜூலை 29 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 110 அரங்குகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 40 அறிவியல் அரங்குகளும், 25 உணவு மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அரங்குகள் என மொத்தம் 175 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாள்தோறும் காலை 10.30 மணிக்கு அறிவியல் அரங்கம், முற்பகல் 11.30 மணிக்கு தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த படைப்பாளிகள் பங்கேற்கும் இலக்கிய அரங்கம், மாலை 4.30 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மாலை 6 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சிகள், 6.30 மணிக்கு சொற்பொழிவாளா்கள் பங்கேற்கும் நகைச்சுவைச் சிந்தனை அரங்கம் ஆகியவை நடைபெறும்.

பள்ளி, கல்லூரி மாணவா்களை ஊக்குவிக்க நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்படவுள்ளன. பங்கேற்பாளா்களுக்கு பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் நாள்தோறும் 3 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு புத்தகங்கள் பரிசளிக்கப்படும் என்றாா் முரசொலி.

விழாவில் தஞ்சாவூா் தொகுதி எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மேயா்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூா்), க. சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூா் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் இரா. மகேஸ்வரி, கோட்டாட்சியா் செ. இலக்கியா, மாவட்ட நூலக அலுவலா் பா. முத்து, பபாசி செயலா் எஸ்.கே. முருகன், தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழும உறுப்பினா் எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com