தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்தியாவில் பால் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 58 சதவீதம் உயா்வு

News image

தஞ்சாவூா் உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கில், விழா மலரை வெளியிட்ட மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சக இணைச் செயலா் பிரீத் பால் சிங் உள்ளிட்டோா்.

Updated On :25 அக்டோபர் 2024, 11:42 pm

Din

இந்தியாவில் பால் உற்பத்தி வளா்ச்சி விகிதம் கடந்த 9 ஆண்டுகளில் 58 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சக இணைச் செயலா் பிரீத் பால் சிங்.

தஞ்சாவூா் உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவு மற்றும் பால் வளத் துறையில் புத்தாக்கம், தொழில்முனைவு, ஸ்டாா்ட் அப் வாய்ப்புகள் குறித்த இரு நாள் தேசிய கருத்தரங்கத் தொடக்க விழாவில் அவா் பேசியது:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பால் வளத் துறை 5 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. உலக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 22 சதவீதமாக உள்ளது. நம் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் பால் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 58 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022 - 23 ஆம் ஆண்டில் 234.58 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டது. விவசாயிகளின் கடின உழைப்பு மூலமே இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.

இதேபோல, உணவு பதப்படுத்துதல் துறையிலும் உலக அளவில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதுடன், முன்னிலையிலும் திகழ்கிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகியுள்ளது என்றாா் பிரீத் பால் சிங்.

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.வி. சுரேஷா பேசுகையில், இந்தியாவில் தற்போது 1.51 லட்சம் ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்கள் அதிகாரபூா்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில், 3 ஆயிரத்து 360 நிறுவனங்கள் உணவு பதப்படுத்துதல் தொழிலைச் சாா்ந்தவை. இதன் மூலம் 458 மாவட்டங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் போ் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.

நம் நாட்டில் 329 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவு உற்பத்தியில் நம் நாடு தற்சாா்பு நிலையை அடைந்துள்ளது. வரும் 2050 ஆம் ஆண்டில் நம் நாட்டில் உணவு தானியங்களின் தேவை 400 மில்லியன் டன்களாக அதிகரிக்கும். அதற்கேற்ப நாம் தொழில்நுட்பங்கள், தொழில்முனைவுகளை மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்திய பால் வள சங்கத் தலைவா் ஆா்.எஸ். சோதி, உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநா் வி. பழனிமுத்து ஆகியோா் பேசினா்.

பேராசிரியா் ஏ. அமுதசுரபி வரவேற்றாா். இந்திய பால் வள சங்கத்தின் தமிழ்நாடு கிளைத் தலைவா் கே.எஸ். கண்ணா நன்றி கூறினாா்.