மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மரணமடைந்த தாய்! ஆசி பெற்று பொதுத் தேர்வுக்குச் சென்ற மாணவி!

தஞ்சாவூர் அருகே தாய் மரணமடைந்த நிலையில், பொதுத் தேர்வுக்குச் சென்ற மாணவி பற்றி...

News image

மரணமடைந்த தாயிடம் ஆசி பெற்று பொதுத் தேர்வுக்குச் சென்ற மாணவி காவியா

Updated On :18 மார்ச் 2025, 5:50 am

தஞ்சாவூர் அருகே திடீரென தாய் உயிரிழந்த நிலையில், கதறி அழுதபடி தாயிடம் ஆசீர்வாதம் பெற்று பொதுத் தேர்வு எழுதுவதற்காக அவரது மகள் சென்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக் கோட்டை கிராமத்தில் ராமாபுரம் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் - கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 (உயிரியல் பாடப் பிரிவு) படித்து வருகிறார்.

இந்த நிலையில் காவியாவின் தாய் கலா, இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது வீட்டில் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாணவி காவியாவுக்கு இன்று காலை உயிரியல் பாடத்தின் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், தாய் உயிரிழந்த சோகத்துடன் பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றுள்ளார் காவியா.

பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாக, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தாயின் காலில் விழுந்து அழுதபடி ஆசிர்வாதம் பெற்றுச் சென்றார். காவியாவுக்கு சக மாணவிகள் ஆறுதல் கூறி தேர்வுக்கு அனுப்பிவைத்தனர்.

தாயின் மறைவு குறித்து மாணவி காவியா கூறியதாவது:

“நான் ஒவ்வொரு முறையும் தேர்வெழுத செல்லும்போது என் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவேன். அப்போது அவர்கள் எனக்கு வாழ்த்துச் சொல்வார். படிப்பு முக்கியம், நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

இன்று எனது தாய் இறந்துவிட்டார். எனக்கு படிப்பு முக்கியம் என்பதால் நான் இன்று தேர்வு எழுத வந்துள்ளேன்” என்று கூறினார்.

காவியாவின் தந்தை ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர். காவியாவுக்கு காயத்ரி என்ற மூத்த சகோதரியும், திருச்செல்வம் என்ற மூத்த சகோதரரும் உள்ளனர். திருச்செல்வம் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.ஏ. படித்து வருகிறார். காயத்ரிக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.