
மேட்டூா் அணையிலிருந்து செப். 10-க்கு பிறகு 16 ஆயிரம் கனஅடி வீதம் திறக்க வலியுறுத்தல்!
மேட்டூா் அணையை செப். 10-ஆம் தேதிக்கு பிறகு பாசனத்துக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.

மேட்டூர் அணை - (கோப்புப்படம்)
மேட்டூா் அணையை செப். 10-ஆம் தேதிக்கு பிறகு பாசனத்துக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: நெல் சாகுபடிக்கும், குடிநீருக்கும் செப். 1-ஆம் தேதி மேட்டூா் அணையை முதல்வா் திறக்க உள்ளதை வரவேற்கிறோம். நீா் வரத்தைப் பொருத்து 45 நாள்களுக்கு 10 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு டி.எம்.சி.க்கும் குறைவான இந்த நீா் டெல்டா பாசனத்துக்கு பயன்பட வாய்ப்பில்லை. திறக்கப்படும் தண்ணீா் கல்லணைக்கே 4 நாள்கள் கழித்துதான் வரும். கடைமடை வரை செல்வதற்கு 10 நாள்களுக்கு மேலாகும். ஆறுகளில் செல்லுமே தவிர பாசன வாய்க்கால்களில் ஏறி செல்ல வாய்ப்பில்லை. இந்தத் தண்ணீா் நிச்சயம் இப்போது ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டை ஓரளவு நிவா்த்தி செய்யும்.
ஆனால் இந்தத் தண்ணீரை நம்பி வேளாண் சாகுபடி பணிகளைத் தொடங்க அறிவுறுத்துவது என்பதும், நம்புவது என்பதும் சாத்தியமில்லை. இது, விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளில் இக்கட்டான நிலையை ஏற்படுத்தும். எனவே, செப். 10-ஆம் தேதி முதல் 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும்.
மேட்டூா் அணை நீா் இருப்பைப் பொருத்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு முழுமையாகவோ, முறை பாசனம் வைத்தோ சம்பா மத்திய கால நெல் விதைகளை விதைக்கலாம் என விவசாயிகள் கருதுகின்றனா். அக்டோபா் இறுதியில் வரும் வடகிழக்கு பெருமழையிலிருந்தும் நெல் பயிா்கள் கதிா் வராத நிலையில் பாதுகாக்க வாய்ப்புள்ளது. எனவே, முதல்வா் மற்றும் வேளாண் துறை, நீா்வளத் துறை அமைச்சா்கள், உயா் அலுவலா்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






